வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 12 விளக்கம்

அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.  
 -தானியேல் 9 : 27
  • ஒரு வாரம் என்பது 7 நாட்கள். 
  • அது 7 வருடங்களைக் குறிப்பிடுகிறது. 
  • அதாவது அதில் 3 1/2 வருடங்கள் சென்ற பிறகு அந்திக் கிறிஸ்து வந்து சொல்லுவான், யூதர்கள் இனி பலி செலுத்த முடியாது என்று. 
  • அவன் வந்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பான்.
  • அவனுக்கு ஒன்றும் ஆகாது. 
  • ஏனென்றால் உடன்படிக்கைப் பெட்டி அங்கு இல்லை. 
அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
 -வெளிப்படுத்தல் 12 : 1

அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.
 -ஆதியாகமம் 37 : 9
  • யோசேப்பின் இரண்டாவது சொப்பனம் இது. 
  • அது நடந்தது. 
  • யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டப் பின்பு அதன் பின்பாக வறட்சி, பஞ்சம் உண்டான பொழுது இந்த மனிதர்கள் தானியம் தேடிக் கொண்டு எகிப்துக்கு போகிறார்கள். அப்போது யோசேப்பு அங்கு அதிபதியாக இருந்தார். 
  • அப்படி தான் அந்த சொப்பனம் நிறைவேறியது. 
  • இப்போது அந்த சொப்பனத்திலே சூரியன் யார்?
  • மல்கியா புத்தகத்தில் இயேசுவை குறித்து நீதியின் சூரியன் என்று சொல்லப்படுகிறது. 
  • ஆனால் யோசேப்பின் சொப்பனத்தில் வந்த 
  • சூரியன் யார்? யாக்கோபு.
  • சந்திரன் யார்? அம்மா.
  • சூரியனும், சந்திரனும் என்பது தகப்பனும், தாயும். 
  • 11 நட்சத்திரங்கள் என்பது அவருடைய சகோதர்கள். 
  • அப்படியானால் யோசேப்பும் ஒரு நட்சத்திரம் தான். 
  • அந்த 12 பேர் மூலம் தான் இஸ்ரவேல் கோத்திரங்கள் வந்தன. 
  • சூரியனையும், சந்திரனையும், 12 நடசத்திரங்களையும் அணிந்திருக்கும் ஸ்திரீ என்றால் அது இஸ்ரவேல். 
அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது;
  • இது கிரேக்க மொழியில் ஒரு அடையாளம் (sign) என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது. 
  • அடையாளம் அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல. 
  • அது உண்மையாகவே ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதல்ல. 
  • உண்மையான சந்திரன், சூரியன், நட்சத்திரங்களை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல. 

அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
 -வெளிப்படுத்தல் 12 : 2
  • இது இயேசுவை குறிப்பிடுகிறது. 
  • இயேசு பிறப்பதற்கு இஸ்ரவேலை தேர்வு செய்தபடியினால் முழு உலகமும் இஸ்ரவேலுக்கு விரோதமாக இருந்தது. 
  • இன்று வரை இஸ்ரவேலை அழிக்க முடியாமல் பிசாசு தடுமாறுகிறான். 
  • இதை தான் இந்த வசனம் சொல்லுகிறது. 
  • அந்த வேதனை இஸ்ரவேலுக்கு உண்டானது இயேசுவை இந்த பூமியில் பிறப்பிக்கும்படியாக.

அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
 -வெளிப்படுத்தல் 12 : 3
  • இது யார்? சாத்தான். 
  • பிசாசு தான் இப்படி வர்ணிக்கப்படுகிறான். 
  • அவனை வலுசர்ப்பம் என சொல்லப்படுகிறது. 
  • ஆதாம் ஏவளை பாவத்தில் விழத் தள்ளும்படியாக சர்ப்பத்தின் ரூபத்திலே தான் அவன் வந்தான். 
  • அதனால் தான் உலகத்தில் உள்ள எல்லா மதங்களிலும் சர்ப்பத்தை வழிபடும் முறைமை இருக்கிறது. 
  • ஏனென்றால் மக்கள் அனைவரும் தன்னை வணங்க வேண்டும் என்பதே அவன் திட்டம். 
சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
  • சிவப்பு என்பது இரத்த நிறம். 
  • பிசாசு என்பவன் மரணத்தின் தூதன். 
  • பிசாசோடு இருப்பவர்களுக்கு மரணம் மாத்திரமே. 
  • ஆனால் இயேசு கிறிஸ்துவோடு இருக்கும் நமக்கு அவர் ஜீவனைப் பெற்றுத் தருவார். 
ஏழு தலைகளையும்
  • எபேசியர் 6:12 - 1)துரைத்தனங்களோடும், 2)அதிகாரங்களோடும், 3)இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், 4)வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்,
  • இந்த 4 ம் தான் இந்த உலகத்தில் கிரியை செய்கிறது 
  • சாத்தான் 3 வகையாக கிரியை செய்வான். 1)யேசபேல், 2)அந்திக்கிறிஸ்து, 3)மரணத்தின் பாதாளத்தின் ஆவி. 
  • இந்த 3ம் வானமண்டலங்களின் மேலே கிரியை செய்கிறது. 
  • மொத்தம் 7. 
பத்துக் கொம்புகளையும், 
  • கொம்புகளைக் குறித்து தானியேலுடைய புத்தகத்தில் காண்கிறோம்.
  • கொம்புகள் என்றால் ராஜ்யங்கள். 
  • 10 என்பது எண்ணிக்கையிலே பரிபூரணத்தைக் காண்பிக்கிறது. 
  • 10 என்பது நாம் நினைக்கும் 10 அல்ல.
  • எல்லாம்  என்று அர்த்தம். 
  • உலகத்தில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களையும் குறிக்கிறது. 
  • 7 வருடங்கள் சாத்தானுடைய ஆட்சி தான் இந்த பூமியிலே இருக்கும். 
  • எல்லா ராஜ்யங்களுடைய தலைவர்களும் சாத்தானுக்கு அடிமைப்பட்டு அவனுடைய கட்டளைக்கு கீழ்ப்பட்டு நடப்பார்கள். 
  • அது தான் 10 கொம்புகள் என்று சொல்லப்படுகிறது.
ஏழு முடிகளையுமுடைய
  • உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களும் அவர்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் சாத்தானுக்கு கொடுப்பார்கள். 
  • ஏழு தலைகளின் மீது ஏழு முடிகளையும் கொடுப்பார்கள். 
  • அந்த 7 வருடங்களுக்குள் உலகத்தில் கிறிஸ்தவர்கள் இல்லை தானே.
  • சபையாகிய நாம் சாத்தானின் தலையை நசுக்கி இருக்கிறோம். 
  • எனவே, சபையாகிய நாம் இருக்கும் வரையிலே பிசாசின் தலையில் கிரீடத்தை அணிவிக்க முடியாது அல்லவா!

அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
 -வெளிப்படுத்தல் 12 : 4
  • வேதம் நமக்கு என்னக் கற்றுக்கொடுக்கிறது என்றால் பிசாசு வானத்தில் இருந்து கீழே விழும் போது தேவதூதர்களில் மூன்றிலொரு பங்கை இழுத்துக்கொண்டு விழுந்தான். 
  • அதை தான் மூன்றிலொரு பங்கு நட்சத்திரத்தை விழத்தள்ளிற்று என்று சொல்லப்படுகிறது. 
  • இவைகள் அடையாளங்கள். 
பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
  • இயேசு பிறந்த நாளில் இருந்து ஏரோது ராஜா உட்பட பிள்ளைகளை கொன்றும் போடும் விதமாக இயேசுவை அழிக்க முயற்சித்தான். 
  • முடியவில்லை. 
  • உண்மையான ஸ்திரீ அல்ல இது. 
  • ஸ்திரீ என்றால் யூதர்களை அடையாளமாக காண்பிக்கிறது.
  • சர்ப்பம் என்றால் சாத்தானை அடையாளமாக காண்பிக்கிறது. 

சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 12 : 5
  • இஸ்ரவேலருக்குள்ளாக இயேசு பூமியில் வந்தார். 
  • அவர் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
  • அது தான் இங்கு சொல்லப்படுகிறது. 

ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
 -வெளிப்படுத்தல் 12 : 6
  • 1260 நாட்கள் என்பது யூத நாட்காட்டியின்படி அது 3 1/2 வருடங்கள். 
  • முதல் மூன்றரை ஆண்டுகள் தான் மோசேயும், எலியாவும் வந்து யூதர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். 
  • அது முடிந்து உடன்படிக்கைப் பெட்டி போய்விட்டது.
  • அந்திக்கிறிஸ்து அப்போது தன்னை தேவன் என்று சொல்லுவான். 
  • நான் மகா பரிசுத்த ஸ்தலத்திலே நிற்கிறேன் என்று சொல்லுவான். 
  • யூதர்களை தன்னை வணங்க கட்டாயப்படுத்துவான்.
  • ஆனால் அவர்கள் வணங்க மாட்டார்கள். 
  • அப்பொழுது அந்திக்கிறிஸ்து யூதர்களை கொலை செய்ய முயற்சிப்பான். 
ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்

  • இஸ்ரவேலை வனாந்தரத்தில் மறைத்து சாத்தானிடமிருந்து பாதுகாப்பதற்காக, அவர்களை காப்பாற்றுவதற்காக வனாந்தரத்திற்கு கர்த்தர் கூட்டிச் சொல்கிறார். 


வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
 -வெளிப்படுத்தல் 12 : 7
  • இங்கு வலுசர்ப்பம் என்பது பிசாசு. 
  • மிகாவேல் என்ற பிரதான தூதனும், அவனை சேர்ந்த தூதர்களும் பிசாசோடு யுத்தம் பண்ணினார்கள். 

வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
 -வெளிப்படுத்தல் 12 : 8
  • இனி பிசாசனவனுக்கு வானத்தில் (Heaven) ல் எந்த ஒரு இடமும் கிடையாது. 

உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
 -வெளிப்படுத்தல் 12 : 9
  • பழைய பாம்பு என்று சொல்லப்படுவது ஆதியில் இருந்து இப்போது வரை மனிதர்களை பாவத்தில் விழத்தள்ளின அந்த பாம்பு ( பிசாசு). 
  • சாத்தானும், அவன் தூதர்களும் மேலே இருந்து பூமிக்கு தள்ளப்பட்டார்கள். 

அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.
 -வெளிப்படுத்தல் 12 : 10
  • வெளிப்படுத்தல் புத்தகத்தில் கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பற்றி பேசப்படும் ஒரே இடம் இது மாத்திரமே. 
  • இரவும், பகலும் என்பது எந்நேரமும் நம்மைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தவன் தள்ளப்பட்டான். 

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
 -வெளிப்படுத்தல் 12 : 11
  • சாத்தானை நாம் இப்போதும், எப்போதும் ஜெயிக்கிறோம். 
  • இயேசுவின் இரத்தத்தினாலும், தேவ வார்த்தையினாலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம். 
  • அதை தான் ஜெயித்தார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது. 

ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
 -வெளிப்படுத்தல் 12 : 12
  • பரலோகத்தில் வாசமாயிருக்கிற சபையே களிகூருங்கள் என்கிறார்.
  • ஆனால் பூமியில் இன்னும் இருப்பவர்களுக்கு ஐயோ என்று சொல்லப்படுகிறது. 
  • சாத்தானின் தாக்கம் அவனுடைய கடைசிகாலங்களில் இன்னும் கொடுமையானதாக இருக்கும். 

வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.
 -வெளிப்படுத்தல் 12 : 13
  • இஸ்ரவேலை அந்திக்கிறிஸ்து துன்பப்படுத்துகிறான்.

ஸ்திரீயானவள் அந்த பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
 -வெளிப்படுத்தல் 12 : 14
  • இஸ்ரவேலர்கள் அந்திக்கிறிஸ்துவிடம் இருந்து தப்பித்துப் போக அவர்களுக்கு பெருங்கழுகின் 2 சிறகுகள் கொடுக்கப்படுமாம். 
  • இதை யோவான் கண்டார். 
  • யோவானுடைய காலகட்டத்திலே அங்கே விமானங்கள் இருக்கவில்லை.
  • அதாவது மிக பிரம்மாண்டமான விமானங்களில் ஏறி இந்த இஸ்ரவேலர்கள் தப்பித்துப் போகிறதை யோவான் கண்டான். 
  • மற்ற பறவைகள் சிறகுகளை அசைத்து பறக்கும், ஆனால் கழுகுகள் சிறகுகளை அசைக்காமல் பறக்கும். 
  • அதைத் தான் யோவான் சொல்லுகிறார் பெருங்கழுகின் 2 சிறகுகள் கொடுக்கப்பட்டது என்று.
ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் 
  • காலம் என்பது 1 வருடம்.
  • காலங்கள் என்பது 2 வருடங்கள்
  • அரைக்காலம் என்பது 1/2 வருடம்.
  • மொத்தம் 3 and 1/2 வருடங்கள். 
  • அந்த மூன்றரை வருடங்கள் தேவன் அவர்களை போஷிப்பார். 

அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
 -வெளிப்படுத்தல் 12 : 15
  • மிக பிரம்மாண்டமான விமானங்களில் ஏறி இந்த இஸ்ரவேலர்கள் தப்பித்துப் போகும் போது அவர்களுக்கு பின்னால் இராணுவ விமானங்கள் தொடர்ந்து போகும். 
  • 20-30 அடி அவர்கள் மேலே பறக்கும் போது அது ஒரு தண்ணீரைப் போல பறந்து செல்லும். 
  • அந்த விமானம் கீழே இருந்து மேலே போகும் போது அது ஒரு பெருவெள்ளத்தைப் போன்ற தோற்றமளிக்கும். 
  • அதை தான் அவர் கண்டார். 

பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
 -வெளிப்படுத்தல் 12 : 16
  • இங்கு ஊற்றின வெள்ளம் என்பது அந்திக்கிறிஸ்துவினுடைய விமானங்கள்.
  • ஸ்திரீ என்பது இஸ்ரவேல்.
  • இஸ்ரவேலரை கொலை செய்ய அந்திக்கிறிஸ்து முயற்சிக்கிற பொழுது Boeing 747 என்ற விமானத்தின் மூலமாக அவர்கள் தப்பித்து போவார்கள்.
  • இப்போதே இப்படிப்பட்ட விமானங்கள் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. 
  • அதை service பண்ணி ஆயத்தத்தோடு வைத்திருக்கிறார்கள்.
  • சடுதியாக ஒரு ஆபத்து வந்தால் அதன் மூலமாக தப்பித்து புறப்படுவதற்கு. 
  • அவர்கள் தப்பித்து போகும் போது 20-30 அடியில் தான் பறக்கப் போகிறார்கள். 
  • அதாவது jet engine உள்ள ஒரு விமானம் வனாந்தரத்திலே 20-30 அடி உயரத்திலே பறக்கவே முடியாது. 
  • ஏனென்றால் வனாந்தரத்தில் இருக்கிறதான அந்த மணற்துகள்களை அந்த engine உள்வாங்கும் பொழுது வெடித்து சிதறி விடும். 
  • ஆனால் இவைகள் வெடிக்காமல் அந்த உயரத்தில் பறக்கப் போகிறது. 
  • அதன் பிற்பாடு அந்திக்கிறிஸ்துவினுடைய விமானங்கள் இவர்களும் 20-30 அடியிலே பறக்கும் போது அந்த engine களுக்குள் இந்த மணத்துகள்கள் போய் அது வெடிக்கிற போது அந்த மணல்களில் அது விழும். 
  • அதை யோவான் கண்டு தான் இதை எழுதுகிறார். 
  • அந்த Boeing 747 ல் ஒரு விமானத்துக்கு 4 engine கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. 
ஒரு கதை:
  • 1967 லே June 5, 6:15am, இஸ்ரவேலர்களிடத்தில் இருந்த 200 விமானங்கள், எகிப்தின் மேலே சிறகடிக்க ஆரம்பித்தன.
  • Sinai, Alexandria, Swiss, Chiro அந்த 4 இடங்களிலும் இருக்கிற விமான நிலையங்களை அழித்துப் போடும்படியாக புறப்பட்டது. 
  • அவர்கள் பறக்க ஆரம்பித்தது 20-30 அடி உயரத்திலே.
  • போனார்கள், அடித்தார்கள், வந்தார்கள்.
  • ஒரு விமானமும் உடையவில்லை. 

அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.  
 -வெளிப்படுத்தல் 12 : 17
  • இஸ்ரவேலை தாக்க முடியவில்லை என்ற கோபத்தில் அந்திக்கிறிஸ்து தேவனுக்காக வாழ்கிற மற்ற மக்களுடனே யுத்தம் பண்ணப் போனான். 
  • சர்ப்பமானது யூதர்களை அழிக்க முற்பட்டது. 
  • முடியவில்லை. 
  • ஆகவே, ஸ்திரீயினுடைய சந்ததியுடன் கூட யுத்தம் பண்ண போயிற்று
அவளுடைய சந்ததியான 
  • சபை அல்ல.
  • இயேசுகிறிஸ்துவினுடைய சந்ததி. 
  • சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, கைவிடப்பட்டவர்கள் இனியாவது நாம் எப்படியாவது பாதுகாப்பாக இருப்போம் என்று எண்ணி இருப்பவர்கள்.
  • இந்தக் கூட்ட மக்கள் அந்திக்கிறிஸ்துவுக்கு ஒரு எதிர்ப்பான கூட்டமாக மாறுகிறார்கள். 
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
 -ஆதியாகமம் 3 : 15
  • இங்கு அவள் வித்து என்று சொல்லப்படுவது இயேசுகிறிஸ்துவினுடைய சந்ததி. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4