ஆவி, ஆத்துமா, சரீரம் - Justin Prabhakaran Sermon

ஆவி, ஆத்துமா, சரீரம் - Justin Prabhakaran Sermon

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
 -1 தெசலோனிக்கேயர் 5 : 23
  • மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்ற இம்மூன்றும் உள்ளவனாயிருக்கிறான். 
  • மனிதன் முப்பரிமானவன் (Man is a 3 dimensional being).
சரீரம் என்ற ஒன்று நமக்கு இருக்கிறது. அதில் எந்த சந்தேகமுமில்லை. 

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
 -எபிரேயர் 4 : 12 

ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக 
  • ஆத்துமாவையும், ஆவியையும் பிரிக்க முடியும் என்று அறியலாம். 
  • இவை இரண்டும் வெவ்வேறானவை. பிரித்து அறியப்படக்கூடியவை. 
ஆத்துமாவையும், ஆவியையும் எதைக் கொண்டு பிரிக்க முடியும்?
தேவனுடைய வார்த்தையைக் கொண்டு 

கணுக்களையும்(Joint) - அதாவது மூட்டு எலும்பு- ஆத்துமா
ஊனையும்(Marrow)- அதாவது மூலை,மஜ்ஜை - ஆவி 
  • ஆட்டுக்கறி சாப்பிடும் போது, மூட்டு எலும்புக்குள் இருக்கிற மஜ்ஜையை உரிந்து சாப்பிடுவோம். 
  • இந்த மஜ்ஜை தான் பவுல் ஆவிக்கு ஒப்பிடுகிறார்.
  • இந்த மஜ்ஜையை சுற்றி உள்ள எலும்பை ஆத்துமா என்கிறார். 
  • எப்படி மஜ்ஜையை சுற்றி எலும்பு இருக்கிறதோ, அப்படியே நமது ஆவியை சுற்றி ஆத்துமா இருக்கிறது. 
  • எப்படி எலும்பிலிருந்து மஜ்ஜையை பிரிப்பது கடினமாக உள்ளதோ, அப்படியே ஆவியையும், ஆத்துமாவையும் பிரித்தறிவது கொஞ்சம் கடினம் தான்.
  • ஆனால் வேத வசனத்தைக் கொண்டு இவ்விரண்டையும் பிரிக்க முடியும். 
தேவன் மனிதனை உருவாக்கின போது அவனை மண்ணினாலே உருவாக்கினார். 

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
 -ஆதியாகமம் 2 : 7

தேவன் மிருகங்களையும், பறவைகளையும் கூட மண்ணினால் தான் உருவாக்கினார்.

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
 -ஆதியாகமம் 2 : 19

மனிதனுக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்:
  • தேவன் மிருகங்களை மண்ணினாலே உண்டாக்கி, அவை உயிரடையக்கடவது என்றவுடன் அவை உயிர்பெற்று விட்டன. 
  • ஆனால் மனிதனை மண்ணினாலே உண்டாக்கி அப்படிச் சொல்லவில்லை. 
  • மாறாக ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று ஆதியாகமம் 2 : 7 ல் வாசிக்கிறோம். 
  • ஜீவாத்துமாவுக்கு Ruha என்ற எபிரேய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. Ruha என்ற பதத்திற்கு ஆவி என்று அர்த்தம். 
Ruha - எபிரேய வார்த்தை:

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
 -ஆதியாகமம் 1 : 2
  • தேவ ஆவியானவர் என்ற பதத்திற்கு இதே Ruha என்ற பதம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மிருகங்களுக்குள் ஆண்டவர் ஜீவசுவாசத்தை ஊதவில்லை. 
  • எனவே அதற்கு ஆவி இல்லை. 
இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:
 -சகரியா 12 : 1

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
 -நீதிமொழிகள் 20 : 27

ஆத்துமா என்றால் என்ன? 
  • ஆத்துமா என்பதன் மூலம் தான் அறிவு, விருப்பு, வெறுப்பு, என்னும் உணர்ச்சிகள், சுயசித்தம் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. 
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.
 -நீதிமொழிகள் 24 : 14

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
 -நீதிமொழிகள் 2 : 10

ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
 -நீதிமொழிகள் 19 : 2

இந்த வசனங்களின் மூலம் அறிவு, சிந்தனை என்பவர் ஆத்துமாவின் பணிகள் என உணரலாம். ஆத்துமாவின் விருப்பு, வெறுப்பு பணிகளை உறுதிப்படுத்துகிறது. 

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.
 -1 சாமுவேல் 18 : 1

என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
 -சங்கீதம் 84 : 2

ஆத்துமாவுக்கு அறிவு உண்டு என்பதால் மிருகங்களுக்கும் அறிவு உண்டு என நிதானிக்கலாம். 

எடுத்துக்காட்டு:
  • நமது நாய்க்கு Biscuits போட்டால் அது வாலை ஆட்டுகிறது. 
  • கல்லை எடுத்தால் அது குரைக்கிறது. 
  • நாய்க்கு விருப்பு, வெறுப்பு இருக்கிறது. 
ஜீவசுவாசம்:
  • மிருகங்களை மண்ணினாலே உண்டாக்கி உயிரடையக்கடவது என்று ஆண்டவர் சொன்னவுடன் அது உயிரடைந்துவிட்டது. ஆனால் மனிதனை மண்ணினாலே உண்டாக்கி ஜீவசுவாசத்தை உண்டாக்கினார். 
ஆத்துமா:
  • மனிதனுடைய ஆத்துமா அவனுடைய ஆவியில் வைக்கப்பட்டுள்ளது (The Soul of an Man in his Spirit).
  • ஆனால் மிருகங்களுடைய ஆத்துமா அவற்றின் சரீரத்தில் வைக்கப்பட்டுள்ளது (The Soul of an Animal  in its Body).
  • ஏனென்றால் மிருகங்களுக்கு ஆவி இல்லை.
  • மிருகத்தினுடைய ஆத்துமா அதன் சரீரத்தில் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது என உணரலாம் (The Soul of an Animal is purely Physical).
எடுத்துக்காட்டு:
  • ஒரு பசு காளை கன்று ஒன்றினை போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். 
  • அந்த காளை கன்றினை, பசுவானது பால் ஊட்டி நன்றாய் வளர்க்கும் போது, அதை பார்க்கிற நாம் பசுவுக்கு எவ்வளவு நல்ல புத்தி என்ற சொல்லி வியப்போம். 
  • அதே காளைக் கன்று கொஞ்சம் வளர்ந்து பெரியதாகிவிட்டால் காளைக்கன்றும், அதே தாய் பசுவும் சேர்ந்து இன்னொரு கன்று போடும். 
  • எந்த தாய் பசுவின் அறிவைக் கண்டு நாம் வியந்தோமோ, அதற்கே இப்போது புத்தியில்லை, அறிவில்லை என்று நாம் சொல்லி விடுவோம்.
  • மிருகத்திற்கு அறிவாகிய ஆத்துமா உண்டு. 
  • ஆனால் அது மிருகத்தின் சரீரத்தில் மாத்திரமே உண்டு. 
  • ஆண், பெண் மிருகங்கள் ஒன்றை ஒன்று சேரும் போது அவை குட்டி போடும். 
  • ஆனால் அவை குடும்பம் நடத்துவதில்லை.
  • மனிதனுக்கு அவனுடைய ஆத்துமா ஆவியில் வைக்கப்பட்டுள்ளதால் மாத்திரம் தான் அவன் குடும்பம் நடத்துகிறான். 
  • மிருகத்தின் ஆத்துமா அதன் சரீரத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அது தாழ்வானது. 
  • மனிதனின் ஆத்துமா அவன் ஆவியில் வைக்கப்பட்டுள்ளதால் மனிதனுடைய ஆத்துமா உயர்ந்தது. 
  • தேவன் ஆவியாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. 
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
 -யோவான் 4 : 23
  • ஆவியாக இருக்கிற தேவனை நம் ஆவியாலே தான் நாம் அறிந்து கொள்ள முடியும். 
  • ஆவியினாலே தான் அவரோடு உறவாட முடியும்.
  • அதனால் தான் ஆவி இல்லாத மிருகங்கள் தெய்வத்தை தேடுவதோ, வணங்குவதோ கிடையாது.
  • தேவன் ஆவியாய் இருக்கிறார். 
  • தேவன் தம் சாயலாய் மனிதனை சிருஷ்டித்தார். 
  • ஆவியாய் இருக்கிற தேவன் மனிதனுக்குள் ஆவியை உண்டாக்கி தம்மைப் போலவே ஆவிக்குரியவனாய் உருவாக்கினார். 
  • இந்தக் கருத்தை தான் தம் சாயலாக மனிதனை சிருஷ்டத்தார் என வேதம் கூறுகிறது. 
  • தேவன் ஆவியாய் இருக்கறார்; மனிதனும் ஆவிக்குரியவனாய் இருக்கிறான் (God is a Spirit; Man is also a Spiritual being).
  • மிருகம் இறந்து போனால், இறந்தது தான். 
  • ஏனென்றால் அதன் ஆத்துமா சரீரத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
  • மிருகங்களின் ஆத்துமா வாழ்வதில்லை.
  • மனிதனின் ஆத்துமா வாழும் (Human’s Soul is a living Soul).
  • மனிதனுடைய சரீரம் செத்தால் ஆத்துமாவும், ஆவியும் தேவனிடத்தில் சென்றுவிடும். 
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
 -பிரசங்கி 12 : 7
  • இங்கு மண்ணானது என்னும் வார்த்தை சரீரத்தை குறிக்கிறது. 
  • மனிதன் இறந்தவுடன், அவனுடைய ஆவியும், அதற்குள் இருக்கும் ஆத்துமாவும், அவன் மறுபடியும் பிறந்தவனாய் இருந்தால் தேவனிடத்தில் சென்றுவிடும். 
  • இல்லையென்றால் நரகத்திற்கு சென்றுவிடும். 
  • ஆவி அழிக்கப்பட முடியாத ஒன்று (Spirit cannot be destroyed).
  • எனவே, நரகத்திலும் ஆவி அழிக்கப்படாது. 
  • மேலும் மனிதனுடைய ஆவியோடே அவனுடைய ஆத்துமாவும் பரலோகத்திற்கோ, நரகத்திற்கோ செல்லுவதால் ஆத்துமாவிலே தான் உணர்ச்சிகள் உண்டு என்பதாலும் நரகத்திற்கு செல்லுபவர்களுக்கு நித்திய வேதனையும், மோட்சத்திற்கு செல்லுபவர்களுக்கு நித்திய சந்தோஷமும் உண்டாகும் என நாம் அறியலாம். 
மறுபடியும் பிறந்தவர்கள், எதிலே மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்? 
  • மறுபடியும் நாம் பிறந்த அன்று நம்முடைய சரீரமும், மறுபடியும் பிறந்திருக்கும் என்றால் நாம் சரீரத்தில் குழந்தைகளைப் போல ஆகி இருப்போம். 
  • அதே போல் நம்முடைய அறிவின் பணியை செய்கிற ஆத்துமா மறுபடியும் பிறந்திருக்கும் என்றால் சிறுபிள்ளையின் அறிவுடையவராய் நாம் மாறி இருப்போம். 
  • அப்படி ஏற்படாததினால் நாம் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மறுபடியும் பிறக்கவில்லை. 
எதிலே மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்?
  • யோவான் 3 ல் நிக்கொதேமுவிடத்தில் இயேசு கிறிஸ்து ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான் என்று கூறுகிறார். 
  • அதற்கு நிக்கொதேமு ஒரு மனிதன் முதிர்வயதாய் இருக்கையில் எப்படி பிறப்பான் என்ற கேட்க இயேசு பிரதியுத்தரமாக ஒருவன் ஜலத்தனாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பரவேசிக்க மாட்டான் என்று கூறுகிறார்.
  • மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும் என்று கூறுகிறார். 
  • இதனால் நாம் மறுபிறப்பின் அனுபவத்தை அடைந்த போது நம்முடைய அறிவாகிய ஆத்துமாவோ, நம்முடைய சரீரமோ மறுபடியும் பிறக்கவில்லை.
  • நம்முடைய ஆவி தான் மறுபடியும் பிறந்திருக்கிறது என உணரலாம். 
  • நம்முடைய ஆவி தான் மறுபடியும் பிறந்தது என்றால் அதற்கு முன்னதாய் அது மரித்திருக்க வேண்டுமே?
  • ஏனென்றால் நமது இரட்சிப்பின் அனுபவத்தை கூறும் போது நாம் ஆவியின்படி பிறந்தோம் என்று கூறாமல் ஆவியின்படி மறுபடியும் பிறந்தோம் என்று தானே சொல்லுகிறோம். 
  • ஆங்கிலத்தில் Born Again என்ற சொல்லுகிறோம்.
  • Again என்ற வார்த்தை முக்கியமானது. 
  • ஆவி  மறுபடியும் பிறந்திருக்கிறது என்றால் அது முன்னால் மரித்திருக்கிறது என உணரலாம். 
மனிதனுடைய ஆவி எப்போது மரித்து போனது?
  • ஆதாம் பாவம் செய்த போது இது நேரிட்டது. 
மரணம் என்றால் என்ன?
  • இறந்து போன ஒருவரிடம் நாம் பேசினால் அவர் பேச மாட்டார். 
  • அவரைப் பார்த்தால், அவர் திரும்பி நம்மை பார்க்க மாட்டார். 
  • அவரைக் கூப்பிட்டால் அவருக்கு கேட்காது. 
  • நமக்கும், அவருக்கும் உள்ள உறவு அறுப்பட்டு போய்விட்டது. 
  • அது தான் மரணம். 
  • உறவுகள் துண்டிக்கப்படுவது தான் மரணம் (The Cessation of Communication is Death).
  • ஆதாம் பாவம் செய்தவுடனே ஆவிக்குரிய மரணம் அவனுக்கு ஏற்பட்டது. 
  • அதாவது ஆவியாய் இருக்கிற தேவனுக்கும், அவர் தம்மோடு ஐக்கியம்படுவதற்காய் உருவாக்கின மனிதனுக்கும் இருந்த உறவு அறுப்பட்டது என புரிந்து கொள்ளலாம். 
  • ஆதாமுக்கு சரீர மரணம் அவன் பாவம் செய்தவுடனேயே சம்பவிக்கவில்லை. 
  • அவனுக்கு முதலில் ஏற்பட்ட மரணம் ஆவிக்குரிய மரணம் மாத்திரமே. 
  • தேவனுக்கும் அவனுக்கும் இருந்த உறவு அறுப்பட்டது. 
  • ஆதாம் அவனுடைய ஆவியில் முதலில் ஏற்பட்ட மரணம், பின்பு சரீரத்திலும் கிரியை செய்து இரண்டாவதாக சரீர மரணத்தையும் கொண்டு வந்து விட்டது. 
  • தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டதினால் மரணத்தை அனுபவித்த நமது ஆவியானது இப்போது கிறிஸ்து இயேசுவினாலே மறுபடியும் உயிர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. 
எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமது 
இரட்சிப்பாகிய மறுபிறப்பின் அனுபவத்தை பெற்றுக்கொண்டோம்
  • ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக அடிக்கப்பட்டார். 
  • மனிதனுடைய பாவத்தினால் உலகத்தில் நுழைந்த வியாதியிலிருந்து நாம் குணமாக அவர் வாரினால் அடிக்கப்பட்டார். 
  • மனிதனுடைய பாவத்தினால் ஏற்பட்ட சரீர மரணத்தையும் தனது இரத்தம் அனைத்தையும் சிந்தி அவர் அனுபவித்தார். 
  • அநேகர் இயேசு கிறிஸ்து நமக்காக சரீரத்தில் மட்டும் வேதனைப்பட்டார் என நினைக்கின்றனர். 
  • அல்ல. அவர் தனது ஆத்துமாவிலும் வேதனைப்பட்டார். 
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
 -மத்தேயு 26 : 38
  • சரீரத்திலும், ஆத்துமாவிலும் வேதனை அடைந்த அவர் சரீர மரணத்தை மாத்திரம் அனுபவியாமல் ஆவிக்குரிய மரணத்தையும் அனுபவித்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 
  • ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய போது ‘பிதாவே, என்னுடைய ஆவியை உங்கள் கைகளில் ஒப்புவிக்கிறேன்’ என்கிறார்.
  • ஆனால் அந்நேரத்தில் பிதாவுக்கும், குமாரனுக்கும் உள்ள உறவு அறுபடுகிறது. 
  • அந்தகாரம் பூமி எங்கும் சூழ்கிறது. 
  • பிதா தன் குமாரனை கைவிட்டதினால் ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்’ என்று இயேசு கிறிஸ்து கதறுகிறார். 
  • உலகத்தில் இருந்த நாட்களில் எப்போதும் பிதா என்ற அழைத்தவர் சிலுவையில் கைவிடப்பட்டவராய் தொங்கும் போது தம்முடைய பிதாவை தேவன் என்று அழைக்கிறார். 
  • இதுவரை இருந்த பிதா, குமாரன் என்ற உறவு அறுபடுகிறது. 
  • பிதாவானவர் குமாரனானவருக்கு தேவனாக மாத்திரம் அப்பொழுது மாறுகிறார். 
சில பேர் சிலுவையில் பரிதாபமாய் கத்திரனவரையா,
கைவிடப்பட்டவரையா தேவன் என வணங்குகிறீர்கள் என்பார்கள்.
  • ஆம் இயேசு கிறிஸ்து கைவிடப்பட்டவர் தான்.
  • ஆண்டவராகிய அவர் நமக்காய் கைவிடப்பட்டதினால் தான் நம்முடைய ஆண்டவராக அவரை ஏற்றுக்கொள்கிறோம், வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். 
  • நம்முடைய பாவங்களுக்காக பிதாவானவர் தன்குமாரனை கைவிட்டார். 
  • பிதாவுக்கும், குமாரனுக்கும் இருந்த உறவு அறுபட்டதினால் தான் ஆவிக்குரிய மரணத்தை இயேசு கிறிஸ்து அனுபவித்தார். 
  • தன்னுடைய பாவத்தினால் தேவனிடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு எந்த ஆவிக்குரிய மரணத்தை ஆதாம் அனுபவித்தானோ, அதே ஆவிக்குரிய மரணத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக அனுபவித்தார். 
  • ஆவிக்குரிய மரணத்தையும், சரீர மரணத்தையும் அனுபவித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாதாளத்திற்கே இறங்கி மூன்றாம் நாளிலே பரிசுத்த ஆவியானவராலே உயிர்த்தெழுந்தார். 
  • அவருடைய ஆவி உயிர்ப்பிக்கப்பட்டது. 
  • உலகத்திலேயே முதன்முதலில் மறுபடியும் பிறந்தவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. 
  • அவரை இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போது நீங்களும் அதே மறுபிறப்பின் அனுபவத்தை பெற்றுக்கொள்கிறீர்கள். 
  • உங்களுடைய ஆவி மாத்திரம் தான் மறுபடியும் பிறக்கிறது. 
  • உங்கள் அறிவுப் பணியை செய்கிற ஆத்துமாவோ, சரீரமோ மறுபடியும் பிறக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
மறுபடியும் பிறந்த நீங்கள் பாவம் செய்கிறீர்களா?

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
 -1 யோவான் 1 : 8
  • இவ்வார்த்தை பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது.
  • மறுபடியும் பிறந்தவர்கள் பாவம் செய்ய வாய்ப்புண்டு என்பதை நாம் உணரலாம். 
இதற்கு காரணம் என்ன?

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
 -கலாத்தியர் 5 : 17
  • மாம்சமும், ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாய் இருக்கிறது என பவுல் கூறுகிறார். 
  • இதற்கு காரணம் என்னவென்றால் நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. 
  • ஆனால் நம்முடைய சரீரமோ அப்படியே தான் இருக்கிறது. 
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
 -கலாத்தியர் 5 : 19
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
 -கலாத்தியர் 5 : 20
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 -கலாத்தியர் 5 : 21
  • நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்பட்டு இருப்பதாலும், நம்முடைய சரீரம் எந்த மாற்றத்தையும் பெறாததினால் தான் மறுபடியும் பிறந்த நாம் பாவம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. 
  • மாம்ச்சத்தின் கிரியைகளாகிய மேற்கண்ட பாவங்களை நம்முடைய சரீரங்கள் இன்னும் மறுரூபம் அடையாததினால் செய்து வருகிறோம். 
  • இதனால் மறுபடியும் பிறந்தவர்கள் பாவம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது என்று யாரும் நினைத்து கொள்ளாதீர்கள். 
அப்படியென்றால் மாம்சத்தின் கிரியைகளாகிய பாவங்களை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். 

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.  
 -1 கொரி 9 : 27
  • கீழ்ப்படித்துகிறேன் என்றாலே ஏதோ ஒன்றுக்கு இன்னொன்றை கீழ்ப்படுத்துகிறது என்று அர்த்தம் ஆகிறது. 
  • சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துகிறேன் என்றால் எதற்கு பவுல் சரீரத்தை கீழ்ப்படுத்துகிறார் என்பதை நீங்களே நிதானித்து இருப்பீர்கள். 
  • இங்கு பவுல் தன் சரீரத்தை தன் ஆவிக்கு கீழ்ப்படுத்துகிறேன் என்று சொல்லுகிறார். 
  • ஏனென்றால் நம்முடைய ஆவி உயிர்ப்பக்கப்பட்டு இருக்கிறது. 
  • நம்முடைய சரீரத்தை நம்முடைய ஆவிக்கு நாம் கீழ்ப்படுத்த வேண்டும். 
  • சரீரம் மீறுதலை செய்ய முயற்சிக்கும். 
  • எனவே, நம்முடைய சரீரத்தை, மறுபடியும் பிறந்த நம் ஆவிக்கு கீழ்ப்படுத்த வேண்டும். 
மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
 -ரோமர் 8 : 6 
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
 -ரோமர் 8 : 7
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
 -ரோமர் 8 : 13
  • மாம்சத்தை ஒடுக்கி ஆவிக்கு கீழ்ப்படுத்துகிற காரியத்தை நாம் தான் செய்ய வேண்டும் என்பது முக்கியமான கருத்தாகும். 
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
 -ரோமர் 12 : 1
  • பவுல் இந்த நிரூபத்தை பரிசுத்தவான்களுக்கு தான் எழுதுகிறார். 
  • அதாவது மறுபிறப்பு அனுபவத்தை பெற்றவர்களுக்கு தான் இந்த நிரூபத்தை எழுதுகிறார்.
மறுபிறப்பை அடைந்தவர்கள் ஏன் தங்கள் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். 
  • மறுபிறப்பு அடைந்தபோது நம்முடைய ஆவி மாத்திரம் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளது. 
  • சரீரம் அப்படியே தான் இருக்கிறது. 
  • ஆகவே, சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தால் தான் பாவங்களின் மேல், மாம்சத்தின் கிரியைகள் மேல் வெற்றிக் கொள்ள முடியும். 
  • நாம் தான் நம்முடைய சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமே தவிர, ஆண்டவர் இதை நமக்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 
  • உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள் என்று பவுல் கூறுவதை கவனியுங்கள். 
  • ஆண்டவர் நமது ஆவியை உயிர்ப்பித்து விட்டார்.
  • ஆனால் சரீரத்தை நாம் தான் ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த சத்தியத்தை அறியாததினால் தான் இன்னும் அநேகர் பாவத்தின் மேல் ஜெயம் பெறாதவர்களாய் இருக்கிறார்கள். 
  • இதை செயல்படுத்த மாம்சத்தின் கிரியைகளாகிய பாவத்தின் மேல் வெற்றிபெற உங்கள் சரீரத்தை உங்கள் ஆவிக்கு கீழ்ப்படுத்துங்கள். You must have a control over your body. 
  • சரீரத்தை கீழ்ப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய ஒரு பயிற்சி தான் உபவாசம். 
  • ஏன் உபவாசிக்க வேண்டும் என்று தெரியாமலேயே இன்று பல பேர் உபவாசிக்கறார்கள். 
  • Fasting போட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என்கின்றனர். 
ஏன் உபவாசிக்க வேண்டும்?
  • உபவாசிக்கும் போது உங்கள் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துகிறீர்கள். 
  • உங்கள் சரீரம் ஆவிக்கு கீழ்ப்படும்போது ஆவி மேலான நிலைமைக்கு வருகிறது. 
  • தேவன் ஆவியாய் இருக்கிறார். 
  • உபவாசிக்கும் போது உங்கள் ஆவி மேலான நிலைமைக்கு வருகிறது. 
  • உபவாசிக்கும் போது உங்கள் ஆவி மேலான நிலைமைக்கு வருவதால் ஆவியாய் இருக்கிற தேவனோடும் நீங்கள் நன்றாக உறவாட முடியும்.
  • ஐக்கியப்பட முடியும். 
  • சில விசுவாசிகள் திடீரென்று கோபப்பட்டு விட்டு பின்னால் அதற்காய் வருந்துவார்கள். 
  • முன்னாலேயே தங்கள் சரீரங்களை ஆவிக்கு கீழ்ப்படுத்தி, அவ்வப்போது உபவாசித்தும் தங்கள் சரீரத்தை தங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்தி பயிற்சி பெற்றிருப்பார்கள் என்றால் அவ்வாறு கோபப்பட்டு இருக்க மாட்டார்கள். 
  • கோபம் மாம்சத்தின் கிரியைகளில் ஒன்று என்பதை கவனியுங்கள்.
  • அது ஒரு பாவமும் கூட. 
எதுவுமே புரியவில்லை என்றாலும் கவலை வேண்டாம்.
  • வேத வசனம் பகுத்து போதிக்கப்பட போதிக்கப்பட தெளிவு உண்டாகுமே தவிர குழப்பம் உண்டாகாது. 
தாம் விரும்பாததை செய்கிறோம்.
எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
 -ரோமர் 7 : 15

அப்படியென்றால் பவுல் ஏன் தான் விரும்பாததை செய்ய வேண்டும். 

ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
 -ரோமர் 7 : 17

அந்த பாவம் எங்கு வாசமாய் இருக்கிறது?

அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.
 -ரோமர் 7 : 18
  • நம்முடைய சரீரம் இன்னும் மாறவில்லை என்றும், நன்மை வாசமாக இருக்கிறதில்லை என்றும், நாம் தான் நம்முடைய சரீரத்தை ஒடுக்கி ஆவிக்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்றும் நிதானிக்கலாம். 
ஆத்துமாவை என்ன செய்ய வேண்டும்?
  • மறுபிறப்பின் அனுபவத்தை நாம் அடைந்த போது நமது அறிவுப் பணியை செய்கிற ஆத்துமா எந்த ஒரு மாற்றமும் அடைவதில்லை. 
  • நம்முடைய ஆத்துமாவில் தான் நாம் சிந்திக்கிறோம். விருப்பு, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். 
  • நம்முடைய ஆத்துமாவில் தான் நாம் சிந்திக்கிறோம் என்பதால் ஆத்துமாவை மனது என்றும் கூறலாம்.
  • ஆங்கிலத்தில் Mind என சொல்லலாம். 
  • மறுபிறப்பை அடைந்தவர் சிலருடைய செய்கைகளையும், வார்த்தைகளையும் கேட்டுவிட்டு சிலர் இவனிடம் இன்னும் தவறான சிந்தனைகள் இருக்கிறதே என்பர். 
மறுபிறப்பை அடைந்தவர்களின் ஆத்துமாவில் எந்தவொரு மாற்றமும் இருப்பதில்லை

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
 -ரோமர் 12 : 2
  • மறுபிறப்பை அடைந்தவர்களுக்கு பவுல், உங்கள் மனம் மறுரூபமாக வேண்டும் என சொல்லுகிறான்.
  • இதையும் நாம் தான் செய்ய வேண்டும். 
  • ஆங்கிலத்தில் Renew your Mind என்று சொல்லப்பட்டுள்ளது. 
  • நமது மனதை நாம் தான் புதிதாக்க வேண்டும். 
எப்படி நமது மனதாகிய ஆத்துமாவை புதிதாக்கி காத்துக்கொள்வது, இரட்சித்து கொள்வது 

ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
 -யாக்கோபு 1 : 21
  • நமது இருதயத்தில் ஏற்றுக் கொண்ட வசனத்தை கொண்டு நமது மனதை அதாவது ஆத்துமாவை இரட்சித்து கொள்ள வேண்டும். 
வேத வசனத்தை இருதயத்தில் நாட்டிக் கொண்டு மனதை எப்படி புதிதாக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
 -பிலிப்பியர் 4 : 8
  • தவறான சிந்தனைகள் தங்களுக்கு வந்த கொண்டிருக்கிறது என பலரும் சொல்கிறார்கள்.
  • இதற்கு அவர்களுடைய மனது வேதவசனத்திற்கேற்ப புதிதாக்கப்படாததே காரணம். 
  • ஒழுக்கமுள்ளவைகளே நாம் சிந்தித்து கொண்டிருந்தால் தவறான எண்ணங்கள் வரவே வாய்ப்பில்லையே! 
யாராவது தவறு செய்தால் அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
 -1 யோவான் 5 : 16

உங்களை குறித்து தாழ்வாய் நினைப்பதும் தவறு தான். வேத வசனம் உங்களை குறித்து என்ன சொல்லுகிறது. 

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
 -1 யோவான் 5 : 5
  • எனவே நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று தான் வேதம் கூறுகிறது. 
  • இந்த வேத வசனத்திற்கேற்ப தான் உங்கள் மனம் மறுரூபமாக வேண்டும். 
ஏன் வேத வசனத்தைக் கொண்டு நம்முடைய மனதை புதிதாக்க வேண்டும். ஏன் நமது சரீரத்தை ஆவிக்கு கீழ்ப்படுத்த வேண்டும்?
  • இந்த இரண்டையும் நாம் செய்யாவிட்டால் மறுபடியும், மறுபடியும் நாம் பாவத்தில் விழ நேரிடும்.
மறுபடியும் பிறந்தவர்கள் பாவம் செய்து விட்டால் என்ன செய்வது? 

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
 -1 யோவான் 1 : 9

எங்கே பாவங்களை அறிக்கையிட வேண்டும்?
  • நம்முடைய பாவங்களை ஆண்டவரிடத்தில் அறிக்கையிட வேண்டும்.
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
 -1 யோவான் 5 : 16




 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4