உன்னதப்பாட்டு ஏழாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 7
உன்னதப்பாட்டு- அதிகாரம் 7- விளக்கம்
ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 1
-உன்னதப்பாட்டு 7 : 1
விளக்கம்:
- மணவாளன், மணவாட்டியோடு பேசி அவளை வர்ணிக்கிறார்.
ராஜகுமாரத்தியே
- மணவாளன் மணவாட்டியை எவ்வளவு அழகாக அழைக்கிறார்.
- பிதா-ராஜா
- இயேசு-ராஜகுமாரன்(மணவாளன்)
- சபை- ராஜகுமாரத்தி(மணவாட்டி)
பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது
- முதல் 9 வசனங்களில் பாதம் முதல் தலை வரை வர்ணிக்கிறார்.
- நம்முடைய பாதம் அழகானதாம்.
- அதே நேரம் பாதம் வெறுமனே வெளியே தெரிய வைத்தில்லையாம்.
- பாதரட்சை போட்டு இருக்கிறோமாம்.
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
-ஏசாயா 52 : 7
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
-மத்தேயு 28 : 19
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
-மத்தேயு 28 : 20
- சுவிசேஷகன் என்று ஒருவன் வரும் முன்பு, இயேசுவானவர் வருவதற்கு ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கத்தரிசியினால் உரைக்கப்பட்டது தான் அது.
சுவிசேஷகர்கள் யார்?
2 விதமான சுவிசேஷகர்கள் உண்டு.
1.சுவிசேஷம் அறிவிப்பதற்கு என்று விசேஷமான அழைப்பும், வரங்களும் கிடைக்கப் பெற்றவர்கள்.
2.எல்லா கிறிஸ்தவர்களும் சுவிசேஷம் அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டவர்கள். நாம் எல்லாருமே சுவிசேஷகர்கள்.
- நம் எல்லோருடைய பாதங்களும் ஆண்டவருடைய பார்வைக்கு அழகாய் இருக்கிறது.
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
-எபேசியர் 6 : 15
- நாம் வெறும் கால்களிலே நடந்தால் கல் குத்தும், முள் குத்தும், அசுத்தங்கள் படும்.
- எனவே, பாதத்தை பாதுகாக்கும் காலணி நமக்கு தேவை.
- சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை நமக்கு தேவை.
- (எ.கா) ஒருவர் எங்காவது கிளம்புவதாக இருந்தால், முழுதாக கிளம்பிவிட்டு கடைசியாக பாதரட்சையை அணிவார்.
- எனவே, பாதரட்சையை அணிந்து விட்டால் அவர் புறப்பட ஆயத்தமாகி விட்டார் என்று அர்த்தம்.
- மணவாளன் மணவாட்டியின் பாதத்தை ஏன் ரசிக்கிறார் என்றால் மணவாட்டியாகிய சபை சுவிசேஷத்தை அறிவிக்க போய் கொண்டே இருக்கும்.
- அதே நேரம் அந்த சுவிசேஷத்தை அறிவிக்க எந்த நேரமும் ஆயத்தமாய் பாதரட்சைகளை அணிந்து கொண்டு இருக்கும்.
உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
-எபேசியர் 6 : 14
- அரை என்றால் இடுப்பு.
- அந்த உடை உடம்பிலிருந்து வழுவிப் போகாமல், நழுவியும் போகாமல் ஒட்டி பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்றால், அந்த இடுப்பிலே ஒரு கச்சையை (Belt) கட்ட வேண்டும்.
- கிறிஸ்தவர்கள் நாம் நமது சர்வாயுத வர்க்கத்தை பிசாசுக்கு எதிராய் போராட,
- நாம் போராடுகிற போராட்டத்தில் சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொள்ள முதலாவது நாம் எடுக்க வேண்டிய பொருள் சத்தியம் என்னும் கச்சை.
- இயேசு சபையின் இடுப்பை ரசிக்கிறார் என்றால் அவர் சபையில் இருக்கிற சத்தியத்தை காண்கிறார் என்று அர்த்தம்.
- சபையிலே, சத்தியமாகிய தேவ வார்த்தை தான் தலையாய முதற்பொருளாக இருக்க வேண்டும்.
- ஒரு ரோம போர்சேவகன் என்ன உடை அணிந்திருந்தாலும், அந்த கச்சையை கட்டாவிட்டால் உடை விழுந்து விடும்.
- இல்லையென்றால் யுத்தம் செய்ய முடியாதபடி தொந்தரவாக இருக்கும்.
- அதே போல தான் சத்தியம் இல்லாத கிறிஸ்தவம் வழுவியும், நழுவியும் போகும்.
- இந்த சபை சத்தியம் என்னும் அவருடைய வேதத்தை பற்றிக் கொண்டிருப்பதை அவர் ரசிக்கிறார்.
- நாம் ஒரு உண்மையான, நேர்மையான, உள்ளதை உள்ளபடி சொல்கின்ற மணவாட்டியாய் இருப்பதை தான் அவர் ரசிக்கிறார்.
உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 2
விளக்கம்:
உன் நாபி -நன்றியுள்ள தன்மை
- நாபி என்றால் தொப்புள்.
- இந்த நாபி என்ற அங்கத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு தாயின் கருவறைக்குள் உருவாகிற அந்த கரு.
- அது வளருவதற்கு உணவு தேவை.
- ஆகவே, அந்த கருவறையிலே தாயோடு அந்த கரு சம்பந்தப்படுகின்ற அந்த உடல் உறுப்பு தான் நாபி.
- அதனால் தான் தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கின்ற உறவை தொப்புள்கொடி உறவு என்று சொல்லுவார்கள்.
- அந்த குழந்தை பிறக்கும் வரை, வயிற்றுக்குள் இருந்து அந்த தாயின் மூலமாய் உணவு, மருந்துகள் போகின்றன.
- குழந்தைக்கு தேவையான அனைத்து நன்மையான காரியங்களும், இந்த தொப்புள்கொடி மூலமாக தான் போகின்றன.
- குழந்தை வெளியே வந்த பிறகு அந்த தொப்புள் கொடியை அறுத்து போட்டு விடுவார்கள்.
- இனி அந்த குழந்தைக்கு தொப்புள் வழியாக செய்யும் போஷனை தேவையில்லை.
- ஆனால் நாம் கடைசி வரை அந்த நாபி இருந்த இடத்தை மறைக்க முடியாது.
- ஏன் மறைக்க முடியாது?
- அதை நாம் மறக்க கூடாது என்பதற்காக.
- ஆகவே, இந்த நாபி நன்றியுள்ள தன்மையை காட்டுகிறது.
- அடுத்ததாக இந்த தொப்புள் உடம்பின் நடுப்பகுதியில் இருக்கின்றது.
- அது போல தான் உலகின் நடுவிலே இஸ்ரவேல் இருக்கிறது.
- இஸ்ரவேலின் நடுவே பெத்தேல் இருக்கிறது.
- ஆண்டவர் அந்த இடத்தை ரசிக்கிறார்.
- நடுமையம் என்பது மிக முக்கியமான ஒரு பிரதேசம்.
- சபையினுடைய நாபி மணவாளனுக்கு தெரிய வேண்டும்.
- நாம் மறுபடியும் பிறந்து தான் கிறிஸ்தவர்கள் ஆனோம்.
- இரட்சிக்கப்பட்ட அனுபவத்தை நாம் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டும்
- நன்றியுள்ளவர்களாய் இருப்பது தான் மையம்.
- ஒரு கிறிஸ்தவனுடைய அழகே, அவன் தேவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பது.
- இரட்சிப்புக்குள், ஊழியத்திற்குள் நம்மை கொண்டு வந்தவர்களை நாம் மறக்க கூடாது.
- உன் நாபியை பார்க்கும் பொழுது எனக்கு திராட்சைரசமே தேவையில்லை போலிருக்கிறது என்று எபிரேய மொழியில் உள்ளது.
- திராட்சைரசம் என்பது விலை உயர்ந்த பெருமதியான பானம்.
- திராட்சைரசம் சந்தோஷத்தைக் குறிக்கும்.
- மணவாளன் சபையை பார்த்து சொல்கிறார்,
- உன் நன்றி கலந்த வாழ்க்கையை பார்க்கும் பொழுது,
- நன்றி உள்ளத்தை நான் பார்க்கும் பொழுது
- எனக்கு சந்தோஷம் வேறு எங்கு இருந்தும் வரத் தேவையில்லை.
- இதுவே எனக்கு பெரிய சந்தோஷம் என்று.
- அவருடைய சமூகத்துக்கு போய் அவசரமில்லாமல் அவருக்கு நன்றி சொல்லுங்கள்.
உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது
- இஸ்ரவேலிலே பிரதான உணவே கோதுமை.
- கோதுமையை அப்படியே குவித்து வைப்பார்கள்.
- அது தான் கோதுமை அம்பாரம்.
- அறுவடை செய்த உடன் மலை போல குவித்து வைத்திருப்பார்களே.
- அது தான்.
- அதற்கு பின் தான் கோதுமை மணிகளை அந்த பதரை விட்டு பிரிப்பார்கள்.
- அம்பாரம் செழிப்பை காட்டுகிறது.
- அந்த கோதுமை அம்பாரம் தான் ஒரு விவசாயின் மன நிறைவு.
- உன் வயிரை நான் பார்க்கும் பொழுது எனக்கு திருப்தியை கொடுக்கிறது.
- இஸ்ரவேலர்கள் மூன்று வேளையும் அப்பம் தான் சாப்பிடுவார்கள்.
- அவர்கள் மூன்று வேளையும் அருந்துகிற உணவு கோதுமை.
- அந்த உணவு போய் சங்கமம் ஆகிற இடம் வயிறு.
- வயிறு உணவையும், அதை உண்டு அடைகின்ற திருப்தியையும் காட்டுகிறது.
- சபையினுடைய உணவு கர்த்தருடைய வார்த்தையாகிய மன்னா.
- அந்த வார்த்தையை வாசித்து, வாசித்து, நாம் வார்த்தையால் நிரம்பும் பொழுது, நம்முடைய வயிறு நிறைகிறது.
- வயிறு நிறைகிறது என்பது திருப்தியை காட்டுகிறது.
- சபையினுடைய, உணவால் வரும் திருப்திக்கு அடையாளம் வயிறு.
- மணவாளன் வயிரை பார்த்து சொல்லுகிறார், உன்னுடைய வயிறு லீலிபுஷ்பங்களால் சூழப்பட்ட கோதுமை அம்பாரம் போலிருக்கிறது.
- அதாவது, சபையே உன் திருப்தியை நான் ரசிக்கிறேன் என்று.
- நீ திருப்தியான மணவாட்டி என்று.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
-1 தீமோத்தேயு 6 : 6
- நமக்கு கொடுத்திருக்கிற ஆரோக்கியம், உடம்பு, உறவுகள், வரங்கள், ஊழியம், பணம் அனைத்தும் போதும் என்ற திருப்தி.
- சபை மனநிறைவோடு எனக்கு போதும் என்ற திருப்தியோடு இருக்க வேண்டும்.
- அந்த திருப்தி கோதுமையால் வருகிறது.
- இயேசு சொன்னார், ஜீவ அப்பம் நானே என்று .
- அவர் தான் அப்பம், அவர் தான் வார்த்தை. வார்த்தை என்பது வேதம். வேதம் என்பது இயேசு.
- இயேசுவால், அவருடைய வார்த்தையால் நிறைந்து திருப்தியாய் வாழுகின்ற சபை வயிறு நிறைந்த திருப்தியான சபை.
- அந்த வயிரை இயேசு பார்த்து, திருப்தியான சபை என்று சந்தோஷப்படுகிறார்.
உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 3
விளக்கம்:
- வசனம் 4:5 ஐ காண்க.
- இரண்டு ஸ்தனங்கள் என்பது விசுவாசமும், அன்பும்.
- இந்த நெஞ்சிலே தான் அனைத்து உணர்வுகளும் பிறக்கின்றன.
- பிறந்த குழந்தை போஷிக்கப்படுவதும் இந்த மார்பால் தான்.
- எனவே, நான் உன் நெஞ்சுப்பகுதியை பார்க்கும் பொழுது, உன்னில் நான் ரசிக்கின்ற இரண்டு அம்சங்கள் விசுவாசமும், அன்பும் என்று மணவாளன் சொல்லுகிறார்.
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 4
விளக்கம்:
- கழுத்து, கண், மூக்கு இந்த 3 அங்கங்கள் இந்த வசனத்தில் உள்ளது.
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்
- தலையையும், சரீரத்தையும் இணைக்கின்ற பகுதி தான் கழுத்து.
- தலை என்பது இயேசு.
- சரீரம் என்பது சபை.
- இவை இரண்டும் இணைந்து இருக்கும் போது தான் அது உண்மையான சபை, ஆசீர்வாதமான சபை.
- கழுத்து துண்டிக்கப்பட்டு விட்டால் மரணம் தான்.
- ஆகவே, கழுத்து முக்கியமான ஒரு உறுப்பு.
- ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தீர்க்கத்தரிசனமாக, சபை தன்னோடு ஐக்கியப்படுகிற இடம் எவ்வளவு உறுதியாய் இருக்கிறது என்று இங்கு காட்டுகிறார்.
- சாலொமோன் யானைத்தந்த மாளிகையை கட்டி இருக்கிறார்.
- அது விலைமதிப்புள்ளது.
- Ivory in English-யானைத்தந்தம்.
- அவரோடு இருக்கின்ற அந்த உறுதியை, தொடர்பை எந்த ஒரு காரணத்திற்காகவும் உடைக்க நாம் அனுமதிக்க கூடாது.
- பவுலடியார் இதை அழகாக சொல்கிறார்.
- அவரோடு நாங்கள் வைத்திருக்கிற உறவை, எந்த உபத்திரவம், எந்த பிரச்சனை, எந்த போராட்டம் உடைக்க முடியும் என்று.
- ஆகவே, தலையாகிய இயேசுவானவரோடு இருக்கிற உறவு.
- அந்த உறவு தொடர்புபடுகின்ற பகுதி எவ்வளவு உறுதியானது என்று அவர் சொல்லுகிறார்.
- கழுத்துக்கும், தலைக்கும் தொடர்புபடுத்துகின்ற எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
- ஒன்று முள்ளந்தண்டு Spinal cord.
- அது தான் கழுத்தை உள்ளே பொருத்துகின்றது.
- கண்ணுக்கு தெரியாவிட்டாலும் நாம் இயேசுவோடு இருக்கின்ற அந்த தொடர்பின் உறுதி ஒரு ஆவிக்குரிய முள்ளந்தண்டு நம்முடைய வாழ்க்கையிலே இருக்கிறது.
- அது மாத்திரமல்ல, நாம் சாப்பிடுகிற சப்பாடு இந்த கழுத்திற்கு உள்ளே இருக்கின்ற தொண்டை வழியாக தான் உள்ளே போகின்றது.
- ஆகவே, கர்த்தராகிய இயேசுவோடு நாம் ஒரு நல்ல உறவிலே இருந்தால் தான் அவர் மூலமாய் நமக்கு கிடைக்கின்ற ஆவிக்குரிய போஷனையாகிய ஆவிக்குரிய மன்னா உள்ளே இறங்கும்.
- தலையோடு சம்பந்தப்பட்ட இரத்த நாடி, இரத்த நாளம் இந்த கழுத்தின் வழியாய் தான் போகிறது, வருகிறது.
- அது போல மூளையோடு சேர்ந்த நரம்புகள் எல்லாம் கழுத்தை தாண்டித் தான் போகின்றன.
- மூளை தான் முழு உடம்புக்கும் கட்டளை கொடுக்கின்றது.
- கழுத்து முதல் பாதம் வரை உள்ள அனைத்து பகுதிகளும் தலையோடு இந்த நரம்புகள் மூலமாய் தான்பொருத்தப்பட்டு இருக்கின்றது.
- எனவே, கழுத்து என்பது முக்கியமான உறவின் பாலம் என்பதனை மறந்துவிடக் கூடாது.
உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும்
- இந்த எஸ்போன் யோர்தானுக்கு கொஞ்சம் அப்புறத்திலே இருக்கும் ஒரு பிரதேசம்.
எஸ்போன் அமைந்திருக்கிற இடம்
குளங்கள் என்பது அந்த தண்ணீர்களின் தெளிவு
- தெளிந்த நீர்.
- தண்ணீரின் அடிப்பாகம் வரை தெரியும்.
- புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்னாரே, கண்களிலே களிம்பை போட சொல்லி.
- அந்த கண்கள் எதை குறிக்கின்றது என்றால், ஒரு சரீரத்தினுடைய, ஒரு ஆன்மாவினுடைய வாசல் கண்.
- கண்கள் இச்சையில்லாத கண்களாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.
- இங்கு கண்கள் கலங்கமற்ற தெளிவை காட்டுகிறது.
- சபை என்பது களங்கமில்லாமல் இருக்க வேண்டும்.
- உங்கள் குடும்பத்துக்கோ, சபைக்கோ பொய்குற்றச்சாட்டுகள் வந்தால் பரவாயில்லை.
- Transparent life- ஒரு தெளிந்த வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.
- இரகசியங்கள் நிறைந்த மக்களாய் நாம் வாழ கூடாது.
- தெளிந்த தண்ணீர் போல கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும்.
- தெளிந்த தண்ணீர் போல சபை இருக்க வேண்டும்.
- அந்த பத்ரபீம் வாசலண்டையில் இருக்கிற குளங்கள் போல, தெளிவான கண்கள் நமக்கு இருக்க வேண்டும்.
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது
தமஸ்கு அமைந்திருக்கிற இடம்
- தமஸ்கு, லீபனோனின் தலைநகரம்.
- சாலொமோன் தமஸ்குவில் அரண்மனை கட்டவில்லை.
- ஆனால் தாண் என்று சொல்லுகிற பகுதியில் (வடக்கு-now Tel-Dan).
- அதற்கு கொஞ்சம் மேலே, இஸ்ரவேலைத் தாண்டி லீபனோன் எல்லையில் ஒரு கோட்டையை கட்டினார்.
- அந்த கோட்டையில் லீபனோனை நோக்கின, அந்த திசையை நோக்கின ஒரு கோபுரத்தை அவர் கட்டினார்.
- ஏனென்றால், அந்த புறஜாதிகளின் தலைநகரத்திலிருந்து என்ன வருகின்றது என்பதனை பார்ப்பதற்கு அவர் ஆட்களை நிறுத்த.
- மூக்கு என்பது வாசனையையும், சுவாசத்தையும் அடிப்படையாக கொண்ட உறுப்பு.
- ஆதாமை சரீரத்தால் உண்டு பண்ணின பிறகு, அவன் நாசியிலே சுவாசத்தை ஊதுகிறார் ஆண்டவர்.
- நாம் உயிரோடு இருப்பதற்கு, ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிரோடு இருப்பதற்கு கூட நமது நாசியிலே தேவனுடைய சுவாசம் இருக்க வேண்டும்.
- அதே நேரம் இந்த மூக்குக்கு முகர்ந்து பார்க்கும் திறமை உள்ளது.
- ஏதாவது அசுத்தமான வாசனை வந்தால் மூக்கு கண்டுபிடித்து விடும்.
- ஒரு நெருப்பு ஆபத்து என்றால், அந்த புகையின் வாசனையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
- மூக்கு முகர்ந்து பார்த்து ஆபத்தை கண்டுபிடிக்கக் கூடிய திறமை கொண்டது.
- அது போல சபை ஆண்டவரோடு நல்ல உறவில் ஜீவனை தக்க வைத்து கொள்ள
- ஆண்டவரிடம் இருந்து வருகின்ற பிராணவாயுவை உள்ளே கொண்டு வந்து , உள்ளே இருந்து வெளியேறுகின்ற அசுத்தமான கார்பன்-டை-ஆக்ஸைடு ஐ வெளியே விட்டு சுவாசித்து கொண்டு இருக்க வேண்டும்.
- அசுத்தங்கள், ஆபத்துகள் வருகின்றதை முகர்ந்து பார்த்து கண்டுபிடிக்கக் கூடிய திறமை சபைக்கு இருக்க வேண்டும்.
உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்.
-உன்னதப்பாட்டு 7 : 5
விளக்கம்:
- மணவாட்டியை வர்ணிக்கும் போது, மணவாளன் தன்னை குறித்தே பேசுகிறார்.
உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது
- மணவாட்டியின் தலை யார்? இயேசு. மணவாளன்.
- அதாவது உன்னுடைய மணவாளன் சாதாரண ஆள் கிடையாது.
- மிகப் பெரியவர் என்கிறார்.
- கர்மேல் மலை- இஸ்ரவேலிலே இருக்கிற ஓர்அழகான மலைத் தொடர்.
கர்மேல் மலைத் தொடர்
Haifa அமைந்திருக்கின்ற இடம்
யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு
கர்மேல் மலை
- Haifa தொடங்கி, அப்படியே அந்த யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு வரை ஓரம் வரை அந்த மலைத்தொடர் அழகாய் வரும்.
- இந்த கர்மேல் மலையிலே பல விசேஷத்துவங்கள் இருக்கின்றன.
- கர்மேல் மலை என்பது ஒரு அழகான மலைத்தொடர் மாத்திரம் அல்ல.
- அற்புதமான மலைத்தொடர்.
- அந்த கர்மேல் மலையில் இருக்கிற அந்த Haifa பக்கத்தில் மேற்கு கரையிலே ஒன்று இருக்கிறது.
- அது தான் Bahai Garden.
- அது ஒரு அழகான தோட்டம்.
- அந்த தோட்டத்திலே பூக்களையும், புற்களையும், பனை மரங்களையும், வித்தியாச வித்தியாசமான தாவரங்கள் வளர்த்திருக்கிறதையும் காணலாம்.
- அது எதை காட்டுகிறது என்றால் அந்த மண்ணின் வளத்தை.
- அந்த தோட்டம் Bahai மதத்தினருக்கு சொந்தமானது அது நமக்கு தேவையில்லை.
- அந்த அளவு தாவரங்கள் முளைப்பதற்கு மண்வளம், நீர்வளம், நிலவளம் வேண்டும்.
- இவை 3 ம் பொருந்திய இடம் தான் அந்த கர்மேல் மலைத் தொடர்.
- இயேசுவும் அப்படித்தானே! சகல நன்மைகளும் பொருந்திய நன்மைகளின் பிறப்பிடமானவர்.
- 1 இராஜாக்கள் 18 ல் கர்மேல் மலையில் நடந்த சம்பவம் ஒன்று இருக்கிறது .
- எலியா, பாகால் தீர்க்கத்தரிசிகளை தோற்கடித்து தேவன் தான் கர்த்தர் என்று நிரூபித்த மலை தான் அந்த கர்மேல் மலை.
- கர்மேல் மலை என்று சொல்லும் பொழுது
- பிசாசு தோல்வியடைந்த ஒரு இடம்.
- விக்கிரக ஆராதனை தோல்வி அடைந்த இடம்.
- கள்ளத்தீர்க்கத்தரிசனங்கள் தோல்வி அடைந்த இடம்.
- யெசபேல் தோல்வி அடைந்த இடம்.
- தேவன் வெற்றி அடைந்த இடம்.
- தேவனுடைய வல்லமையை அவர் காண்பித்த இடம்.
- வானத்திலிருந்து அக்கினி இறங்கின இடம்.
அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
-1 இராஜாக்கள் 18 : 38
- அப்படி தேவனுடைய வல்லமை வானத்திலிருந்து இறங்கி வந்து, சாத்தானையும், அவனுடைய சேனைகளையும் தோற்கடித்து, தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தின இடம்.
- இதை அடிப்படையாக வைத்து மணவாளன், மணவாட்டியிடம் சொல்கிறார். உன் சிரசு கர்மேல் மலையை போல் இருக்கிறது என்று.
உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது
- இரத்தாம்பரம் என்றால் செக்கசெவேறென்று சிவப்பு.
- ஒரு பெண்ணின் தலைமயிர் சிவப்பு நிறமாய் இருக்குமா? இல்லை.
- இதிலே ஒரு ஆவிக்குரிய அடையாளம் இருக்கிறது.
- அது என்னவென்றால் உன்னை நான் சம்பாதித்தது என்னுடைய இரத்தத்தை சிந்தி என்கிறார்.
- ஆகவே நீ என் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறாய். நீ என் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறாய்.
- என்னுடைய இரத்தம் உனக்கு தலைமயிரைப் போல அலங்காரமாயிருக்கிறது.
- இந்த இரத்தாம்பரம் என்பது இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கும்.
- இயேசுவின் இரத்ததால் மறைக்கப்பட்ட, மூடப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மணவாட்டி தான் சபை என்பதனை தீர்க்கத்தரிசனமாக இந்த இடத்தில் காட்டுகிறார்.
- இயேசு வருவதற்கு 1000 வருடங்கள் முன்பே இது சொல்லப்பட்டு இருக்கிறது.
- ஒரு அரண்மனை என்று பார்த்தால், அங்கு ஒரு நடைக்காவணம் இருக்கும்.
- பெரிய அரண்மனையிலே இவர்கள் நடந்து திரிவதற்கு ஒரு பக்கம் பெரிய சுவர் இருக்கும்.
- இன்னொரு பக்கம் தூண்கள் இருக்கும்.
- இடையிலே தான் ராஜா அப்படியே ராஜநடை போட்டு நடைபயில்வார்.
நடைக்காவணம்(passage)
மயங்கி நிற்கிறார்
- மயங்கி நிற்கிறார் என்பது எதை காட்டுகிறது என்றால் அவரே ஆச்சர்யப்பட்டு, சொக்கி நிற்கிறார் என்று அர்த்தம்.
- இவ்வளவு நேரம் உன்பாதம் முதல் தலை வரை பார்த்தேனே நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்று.
- தலையில் என்னைக் காண்கிறேனே,
- அதில் இரத்தாம்பரத்தை பார்க்கிறேனே என்று.
- அதனால் அந்த நடைக்காவணத்திலே மயங்கி நிற்கிறேன் என்கிறார்.
- அவரே நம்மை பார்த்து மயங்கி நிற்கிறாரே, நாம் அவரை பார்த்து மயங்கி நிற்கிறோமா?
- வேதத்தில் நாம் இயேசுவானவரை பார்க்கும் போது அவருடைய குணம், நாமங்கள், அதிசயங்கள், அற்புதங்கள், மகிமை
- இதையெல்லாம் பார்த்து நமக்கு ஒரு ஆச்சரியமான நிலை வருகிறதா? வர வேண்டும்.
- அது தான் துதியின் உச்சக்கட்டம்.
மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
-உன்னதப்பாட்டு 7 : 6
-உன்னதப்பாட்டு 7 : 6
விளக்கம்:
மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே
- நீ எனக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்கினாய்.
- நாம் என்றாவது தேவனுடைய மனமகிழ்ச்சியைக் குறித்து சிந்திக்கிறோமா? இல்லை.
- சிலர் நினைக்கிறார்கள், நாம் ஆண்டவரை ஏன் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று.
- தேவன் பல வேதனைகளை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறார்.
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
-எபேசியர் 4 : 30
அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை (மனிதனை) உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
-ஆதியாகமம் 6 : 7
- நோவா வெள்ளபிரளயத்திற்கு பிறகு, ஆண்டவர் உலகத்தை அழிக்க மாட்டேன் என்றார்.
- அன்று முதல் இன்று வரை உலகம் மோசமாக தான் இருக்கிறது.
- ஆண்டவர் துக்கப்படாமல் எப்படி இருப்பார்?
- நான் படைத்தவர்கள் இப்படி நரகத்திற்கு போகிறார்களே என்று அவருக்கு வருத்தம் இருக்கும் அல்லவா?
- அந்த வேதனைக்கு நடுவில், அவருக்கு ஒரே சந்தோஷம் கிறிஸ்தவர்கள்.
- கிறிஸ்தவர்களை பார்க்கும் போது அவருக்கு மனமகிழ்ச்சியாயிருக்கிறது.
- எனவே இந்த வசனம் சொல்லுகிறது.
- சபையே! நீ எனக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்குகிறாய் என்று.
- உலகத்தை பார்க்கும் போது எவ்வளவு வேதனை வருகிறது.
- ஆனால் சபையை பார்க்கும்போது இன்பமாக இருக்கிறது என்கிறார்.
- சபை அழகாக இருக்கிறது.
- எனக்கு இன்பத்தை தருகிறது என்கிறார்.
- ஞாயிறு ஆராதனையில் நம்முடைய தேவைகளை மட்டுமே அவரிடம் கேட்டுக்கொண்டிராமல்
- ஆண்டவரை சந்தோஷப்படுத்த வேண்டும்.
- தேவனை சந்தோஷப்படுத்துவது நமக்கு கடமையாக மாற வேண்டும்.
உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 7
விளக்கம்:
உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும்
- நீதிமான் பனையைப் போல செழிப்பான் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோமே!
- தெபோராள்(நியாயாதிபதிகள்) பனைமரத்தின் அடியில் இருந்து தான் நியாயம் விசாரித்து கொண்டிருந்தார்.
- பனைமரம் நீதியைக் குறிக்கும்.
- நீதி இரண்டு வகைப்படும்.
- ஒன்று தேவனோடு மனுஷனுக்கு இருக்கிற சரியான உறவு.
- இன்னொன்று மனிதனோடு மனுஷனுக்கு இருக்கிற சரியான உறவு.
- அந்த உறவை இழந்தபடியினால் தான் பாவிகளாய் இருந்தோம்.
- அந்த உறவை மறுபடியும் புதுப்பித்து கொண்டபடியினால் மறுபடியும் நீதிமான்களாக ஆகி விட்டோம்.
- இந்த நீதி என்பது கீழிலிருந்து மேலாக அமைகிறது.
- அதாவது உன் நீதியில் இந்த தேவனுடனான உறவு (மேலிருந்து கீழ்) உயரமாய் இருக்கிறது.
- என்ன அர்த்தம்?
- உன் நீதி அதிகமாய் இருக்கிறது.
- உன் நீதி என்னை எட்டுகிறது.
- நீ என்னோடே வைத்திருக்கிற உறவு என்னை வந்தடைகிறது.
- இது தான் அந்தப் பகுதியின் அர்த்தம்.
- தேவனோடு சரியான உறவு இருந்துவிட்டால் மட்டும் போதாது.
- மனிதர்களோடும் சரியான உறவு வேண்டும்.
- ஆகவே, இந்த நீதி என்பது பக்கவாட்டில் அமைகிறது.
- தேவனோடும், மனிதனோடும் சரியான உறவில் இருக்க வேண்டும்.
- இங்கு மணவாளன் மணவாட்டியின் பனைமரத்தன்மையை மாத்திரம் பாராட்டாமல், உயரத்தையும் பாராட்டுகிறார்.
- ஒருவரோடு ஒருவர் உறவில் இருப்பது என்றால் என்ன?
- அவர்கள் அந்த நபரோடு பேசுவார்கள்.
- அவர்கள் அந்த நபர் பேசுவதைக் கேட்பார்கள்.
- சேர்ந்து செயல்படுவார்கள்.
- ஒன்றாக உட்கார்ந்து கலந்தாலோசிப்பார்கள்.
- ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவார்கள்.
- ஒரு நல்ல உறவில் இருப்பதற்கு இவையெல்லாம் தேவை.
- அது போல நாம் சபையாக, தேவனோடு நல்ல உறவில் இருப்பதற்கு இவை அனைத்தும் தேவை.
- ஸ்தனங்கள் விசுவாசம் மற்றும் அன்பை குறிக்கும்.
- எனவே, இவை இரண்டையும் பார்த்து ஆண்டவர் ரசிக்கிறார்.
நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 8
விளக்கம்:
நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்
- நீ என்னோடு நல்ல உறவில் இருக்கிறபடியினால், நானும் உன்னோடே ஏறுவேன்.
- அதாவது நானும் உன்னோடே உறவில் இருப்பேன்.
- உறவை ஏற்றிக் கொள்வேன்.
- அதிகமாக்கி கொள்வேன் என்று மணவாளன் சொல்கிறார்.
- நாம் சபையாக ஆண்டவரோடு வைத்திருக்கிற உறவை அதிகமாக்கினால், அவர் நம்மோடு இருக்கிற உறவை அதிகமாக்குவார்.
- விசுவாசம், அன்பு என்ற உன் மார்பகங்கள்.
- திராட்சைக்குலைகள் போல இருக்கிறதாம்.
- திராட்சக்குலை சந்தோஷத்தைக் குறிக்கிறது.
- மூக்கு- கவனமாய் ஆபத்தை முகர்ந்தே கண்டுபிடிப்பது, அந்த தன்மையை நான் ரசிக்கிறேன் என்கிறார்.
உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 9
விளக்கம்:
உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும்
என் நேசர்
- ‘என் நேசர்’ குடிக்கையில் என்பதனைப் பார்த்து இது மணவாட்டி பேசுகிறாள் என்று நாம் நினைப்போம்.
- ஆனால், இது மணவாளன் தான் பேசுகிறார்.
- அவர் தன்னையே ‘என் நேசர்’ என்று குறிப்பிடுகிறார்.
- எ.கா- அப்பாவுக்கு குடு மா என்று பிள்ளையிடம் சொல்வது போல.
- உன் தொண்டை, ‘நீ என்னை என் நேசர்’ என்றல்லவா கூப்பிடுகிறாய்.
- குடிக்கும் போது மெதுவாய் இறங்குகிற அந்த அருமையான திராட்சைரசத்தைப் போல இருக்கிறது, உன் தொண்டை.
- தொண்டையில் இருந்து தான் குரல் சப்தமே வருகிறது.
- பாடும் போது கூட தொண்டையில் இருந்து தான் குரல் வரும்.
- தொண்டைக்குழி இறுகினால் சுவாசிக்க முடியாது.
- உணவு அருந்தினால் தொண்டையை தாண்டி அந்த உணவு போனால் தான் சரி.
- இல்லையென்றால் புரை ஏறும்.
- சில நேரம் அது உயிருக்கே ஆபத்தாய் முடியும்.
உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான
- உறங்குகிறவர்களின் உதடுகளை பேசப்பண்ணுகிறது என்றால் என்ன?
- நல்ல விழிப்புணர்வை கொடுப்பது.
- சில நேரம் களைப்பிலே தூங்கி வழிவோம்.
- அதை தான் இங்கு காட்டுகிறது.
நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது
- நல்ல திராட்சைரசம் என்பது முதன்முதல் எடுக்கக் கூடிய ஒன்று.
- விலை அதிகமானது.
- ஔசதம் கொண்டது.
- சுவையானது.
- இந்த திராட்சைரசம் ஒரு விலையுயர்ந்த தன்மையை, பெருமதியை, மகிழ்ச்சியை காட்டுகிறது.
- உன் தொண்டையிலிருந்து வருகிற சத்தத்தை, பேச்சை ரசிக்கிறேன் என்று மணவாளன் சொல்கிறார்
- எந்த அளவுக்கு?
- அந்த விலை உயர்ந்த திராட்சரசத்தின் அளவிற்கு என்கிறார்.
நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.
-உன்னதப்பாட்டு 7 : 10
விளக்கம்:
- சபையாகிய மணவாட்டி பேசுகிறாள்.
- நாம் யாருடயவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது.
- நாம் அனைவருமே தேவனுக்கு தான் சொந்தமானவர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
-உன்னதப்பாட்டு 7 : 11
விளக்கம்:
- வசனம் 11-13
- சபை இயேசுவைப் பார்த்து ஊழியத்தைப் பற்றி பேசுகிறது.
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
-மத்தேயு 28 : 19
வாரும் என் நேசரே
- ஆண்டவரே! நீங்கள் எனக்கு கட்டளை கொடுத்தீரே.
- நீங்கள் என் பாதத்தை, பாதரட்சைகளை வர்ணித்தீர் அல்லவா.
- நான் ஊழியம் செய்ய போகிறேன்.
- ஆனால் நீர் என்னோடு வாரும் என்கிறது சபை.
- என்னோடு அங்கு தங்கியிரும் என்று சபை சொல்லுகிறது.
- வயல்வெளி அறுவடையை குறிக்கிறது.
தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
-மத்தேயு 9 : 37
- நான் அறுவடைக்கு வந்த ஆளாய் வருகிறேன்.
- வாரும். வந்துக் காட்டும் என்கிறாள் மணவாட்டி.
- இயேசுவானவர் ஊழியம் செய்த நாட்களில் அவர் கிராமங்கள்தோறும், பட்டணங்கள்தோறும் போனார்.
- அது போல சபை ஊழியத்திற்கு போவதற்கு இயேசுவானவரை தன்னோடு அழைக்கிறது.
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
-உன்னதப்பாட்டு 7 : 12
விளக்கம்:
- தேவனுடைய ராஜ்யம் திராட்சை தோட்டத்துக்கு ஒப்பிடப்படுகிறது.
- எனவே தேவனுடைய ஊழியத்திற்காக எழும்பினவுடனே அதிகாலையிலே போவோம்.
- நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று சபை அழைக்கிறது.
- ஊழியம் எப்படி போகிறது? ஜனங்கள் இரட்சிக்கப்படுகிறார்களா? என்றெல்லாம் பார்ப்போம் வாருங்கள் என்று சபை மணவாளனை அழைக்கிறது.
- நாம் போய் ஊழியம் செய்வோம் என்று அழைக்கிறது.
- நீர் என்னை நேசித்தீர்.
- நான் உம்மை நேசிக்கிறேன்.
- அதுமாத்திரமல்ல.
- நானும் உலகத்தை நேசிக்கிறேன்.
- அதனால் நான் உலகத்துக்கு ‘நான் நேசிக்கிற அந்த நேசம் எப்படிப்பட்டது’ என்று உமக்கே காட்டுவேன்.
- வாரும் என்று மணவாட்டி அழைக்கிறாள்.
தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.
-உன்னதப்பாட்டு 7 : 13
விளக்கம்:
சகலவித அருமையான கனிகளுமுண்டு
- அதாவது சபையாகிய நான் ஊழியம் செய்து அந்த பிரதிபலன்களாகிய கனிகளை தருவேன்.
- இது ஆவிக்குரிய கனி அல்ல.
- அது ஒற்றைச்சொல்.
- அது கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியினால் கொடுக்கிற கனி.
- ஆனால் இங்கு கனிகள் என்று வருவது, ஊழியத்தால் வரும் பிரதிபலன்களை காட்டுகிறது.
- இஸ்ரவேலில் இருக்கிற வாசனையான பழங்கள் நறமணம் வீசும்.
- புதியவை, பழையவை எல்லாம் ஊழியத்தால் வருகின்றவர்கள்.
- பழையவை- பின்வாங்கிப் போய் மறுபடியும் கொண்டுவரப்படுகிறவர்கள்.
- மறுபடி வருவது ஒரு இன்பமான அம்சம்.
- கெட்ட குமாரன் கதையிலே இந்த அனுபவத்தை பற்றி நாம் வாசிக்கிறோம்.
- சில நேரம் பின்வாங்கி போனவர்கள் மறுபடியும் வரும் போது வருகின்ற இன்பம் அதிகமானது.
- ஆண்டவருடைய சந்தோஷத்திற்கு மற்றும் நம்முடைய சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.
- மணவாளனே, பின்வாங்கிப் போய் மறுபடியும் வந்தவர்களை உமக்காக வைத்திருக்கிறேன் என்கிறாள் மணவாட்டி.
Comments
Post a Comment